Check out the Books I Read

Wednesday, November 9, 2011

பண்டிகையும் இனிய நினைவுகளும்!


Sorry to disappoint the lakhs and lakhs of non-Tamil readers of my blog. This one is going to be in Tamil.

பண்டிகை. நம்மை சந்தோஷமாக இருக்க செய்வதற்காக நமது முன்னோர்கள் குறித்த சில நாட்கள்! அதில் ஒன்றே இந்த தீபாவளி! ஒருவேளை என்னுடைய பழைய ப்ளாக் படித்த சில பேருக்கு தெரிந்திருக்கலாம் – சில வருடமாகவே என்னுடைய தீபாவளி பூனே-வில் தான். சென்ற வருடம் சென்னையில் கொண்டாடியதும் சிலருக்கே தெரியும். இந்த வருடம் நிச்சயம் என்னுடைய வீட்டில் என்று முடிவு செய்து தீபாவளிக்கு நான்கு நாட்கள் முன் என் வீடு போய் சேர்ந்தேன். அடுத்த நாள் என் அண்ணனும் வந்து சேர்ந்தான். தீபாவளி அன்று என் அக்காளும் வந்து சேர்ந்தாள் – கூடவே என் மருமகனும்!

பண்டிகைக் கொண்டாடச் சென்ற எனக்கு, தீபாவளி மட்டுமல்ல – நான் அங்கே இருந்த பத்து நாட்களுமே பண்டிகை போல ஒவ்வொரு நாளும் கொண்டாட்டம் தான்! தன் பிள்ளைகள் அனைவரும் வந்த மகிழ்ச்சியில் என் தாய் தந்தையரும் குளிர்ந்துவிட்டிருன்தனர்! என் அண்ணனும் அவர்களை மேலும் குளிர்விக்க ஒரு புதிய ‘Fridge’ வாங்கி கொடுக்க என் வீட்டில் புதியதோர் வரவாய் அதுவும் ஒரு ஓரமாய்!

தீபாவளி பண்டங்கள் ஒரு புறம், தினம் தினம் சமைக்கும் சாப்பாடு ஒரு புறம் என என் பாடு கொண்டாட்டம் தான்! கிட்டத்தட்ட ஐந்து மாதங்களுக்கு பின் வீட்டுக்குச் சென்ற எனக்கு கண்ணில் காண்பவை யாவுமே அமிர்தமாகத்தான் பட்டது! மகிழ்ச்சி மிகுதியில் ஒரு சுற்று பெருத்தாலும், பூனே போனால் குறயப்போகிறது என்று என்னை நானே சமாதனபடுதிக்கொண்டேன். சிறிது நாட்களில் என் அண்ணனும் சென்னை சென்று விட, அக்கா+மருமகன் திருச்செந்தூர் சென்று விட, நான் மட்டும்.

இந்த இன்டர்நெட் யுகத்தில் அம்மாவை அருகில் அமர வைத்து அவர்களுக்கு பிடித்த பழைய பாடல்களை ‘டவுன்லோட்’ செய்து கொடுத்தேன். அப்படியே அவர்களிடம் பழைய கதைகள் கேட்க ஆரம்பித்தேன். குறிப்பாய் என்னுடைய (கீழே உள்ள படம், சாமி சத்தியமாய் என்னுடையது என்று உறுதியளிக்கிறேன்) சின்ன வயது படம் மீண்டும் என் கையில் கிடைக்க, அதை வைத்து ஆரம்பித்தேன்.



எங்கள் குடும்பத்தில் பிறந்த குழந்தைக்கு ஒரு வயது வரை மொட்டை அடிக்க மாட்டார்கள்! எனக்கும் அப்படித்தான். ஒரு வயதிற்குள் எனக்கு வளர்ந்த முடியின் அளவை தான் நீங்கள் படத்தில் பார்க்கிறீர்கள்! என் பாட்டியும் சிறு வயதில் என்னிடம் கூறுவதுண்டு – “சின்ன வயசுல நீ நிறைய முடி வைத்து பார்பதற்கு சாய்பாபா போல இருப்பாய்” என்று! ஆனால் அந்த படம் ஒரு வயதிற்கு முன்னால் எடுத்த படம் என்பது மட்டும் எனக்கு இவ்வளவு நாள் தெரியாது! எனக்கு ஒரு வயதிற்கு ஒரு வாரம் இருக்கையில் என் தாய் செய்த அந்த காரியம் என்னை பெருமைப்பட வைத்து!

விறு விறுவென என்னைத் தூக்கிக்கொண்டு பக்கத்தில் உள்ள ஒரு ‘Studio’ சென்ற என் தாய், தன் கழுத்தில் இருந்த ‘Necklace’ஐ கழற்றி எனக்கு போட்டு ஒரு போட்டோவும் எடுத்து வைத்தார்! இன்றும் என்னை நானே இருபத்தியாறு வருடங்களுக்கு முன் பார்க்கையில் ஒரு அதீத சந்தோஷம்! Atleast, சின்ன வயசுலயாவது அழகா இருந்தோமே என்று!!

என் தாயிடம் பழைய விஷயங்களை கேட்டுக்கொண்டிருக்கையில் ஒரு சுவையான விஷயம் என் காதில் விழுந்தது - தீபாவளியை ஒட்டி வந்த ஷஷ்டி பற்றி பேசுகையில்! என் தாய் பிறந்து வளர்ந்தது பழனியில்! அவர்களும் தன் பிறந்த ஊர் பற்றியும் அங்கே நடக்கும் ஷஷ்டி விழா பற்றியும் பெருமிதமாக பேசிக்கொண்டிருந்தார்கள்! அப்போது அங்கே ஷஷ்டி விழாவில் முருகனைப் பாட டாக்டர்.சீர்காழி கோவிந்தராஜன் ஒவ்வொரு வருடமும் வருவார் என்றும், விழா முடிந்த பின்னல் என் தாயின் சித்தி வீட்டிற்கு வந்து அவர்கள் செய்து தரும் ‘கை சுற்று முறுக்கு’ (அவருக்கு மிகவும் பிடிக்குமாம்) சாப்பிட்டு விட்டு தான் செல்வாராம்! என் தாயும் அவரிடம் பல முறை உரையாடியிருக்கிரார்கள்!

இனி ஒவ்வொரு முறையும் ஷஷ்டி என்றவுடனோ அல்லது டாக்டர்.சீர்காழி கோவிந்தராஜன் என்றவுடனோ எனக்கு என் தாய் நினைவு நிச்சயம் வரும்! அது போல் இனி ஒவ்வொரு முறை வீட்டிற்கு செல்லும் போதும் இது போன்று பழைய கதைகளைக் – இனிமையான நினைவுகளைச் சேகரிக்கவும் தவரப்போவதில்லை!

அடுத்த பதிவில் என்னுடைய மூன்று நாள் சென்னை அனுபவங்களை தொகுக்க இருக்கிறேன்!

No comments:

Post a Comment